சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மிகப் பிரமாண்டமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 1,736 வீரர்களும், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மிகவும் விமரிசையாக செய்திருந்தது.


இப்படியான நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உள்ள லீலா பேலஸில், ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி’ நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர். 7 ரவுண்ட் ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் இவர்கள் விளையாடுவார்கள். 


இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ ரேட்டிங் 2,711 ஆக உள்ளது. அந்த வகையில் இந்த செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜூன் எரிகைசி (2,727), டி.குகேஷ் (2,720), பி.ஹரி கிருஷ்ணா (2,696) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஈரான் நாட்டைச் சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியம், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்ஸாண்டர் பிரட்கே ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 


2700 எலோ ரேட்டிங் புள்ளிகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.  இப்போட்டியை தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 லட்சமும், 3வது இடத்தை பிடிப்பவர்கள் ரூ.8 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதேபோல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3.5 லட்சம், ரூ.2.5 லட்சம், ரூ.2 லட்சம் பெறுவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Cameron Green: ‘இரண்டாவது கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்... நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதி! விவரம் இதோ!