டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி வீசி தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்தியா வீரர் நீரஜ் சோப்ராவை  அனைவரும் கொண்டாடாடி வருகின்றனர். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 23 வயதிலேயே முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ள இவருக்கு மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் பல வெகுமதிகளை அறிவித்த வண்ணம் உள்ளன.



 

வீரர் நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக, நீரஜ் எனும் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் அறிவித்திருந்தார். ஒரு வார காலத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், நீரஜ் என்ற பெயர் உள்ளவர்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பெட்ரோல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறிய பங்க் உரிமையாளர், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.



 

அதே போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி என்பவர் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தனது ஓவியக்கலையின் வாயிலாக அவரது படத்தை முழுவதுமாக ஆப்பிள் பழத்தில் வரைந்து அசத்தியுள்ளார்.



 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த  நகை தயாரிப்பு கலைஞர் சமுத்திரகனி என்பவர் 480 மில்லி கிராம் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட சிலையை நீரஜ் சோப்ராவுக்கு  செய்து அசத்தியுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய நகை கலைஞர் சமுத்திரக்கனி,

 

கடந்த 25 வருடமாக நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். தொழிலில் பணத்தை ஈட்டுவதை மட்டும் நோக்கமாக கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது என்பதால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.



 

கடந்த 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை ஒன்றை உருவாக்கினேன். தொடர்ந்து 250 மில்லி கிராமில் டார்ச் லைட், 180 மில்லி கிராமில் கிறிஸ்துமஸ் மரம், தேசிய கொடி, பொங்கல் பானை, கரும்பு என பல்வேறு நுண்ணிய பொருட்கள் செய்தேன். அதே போல் தங்கத்தில் சிறிய மின்விசிறியை செய்து மின்சரம் மூலம் சுற்றவைத்தேன் அதற்கு பொதுமக்களிடம் வெகுவான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 480 மில்லி கிராம் தங்க முலாம் பூசப்பட்ட சிலை ஒன்று செய்துள்ளேன்.



 


 

தொடர்ந்து மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் அரசியல் தலைவர்களிடமோ அதிகாரிகளிடமோ இருந்து எந்த அங்கீரத்தையும் பெறவில்லை. எங்களை போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கும் போது நிறைய திறமைகள் வெளிப்படும் என வேண்டுகோள் விடுத்தார்.