ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மலேசிய அணி இந்த தொடரிலிருந்து விலகியது.  நேற்று நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 


இந்நிலையில் இன்று இந்திய அணி தன்னுடைய மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் கால்பகுதியில் இந்திய அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தது. ஹர்மன்பிரீத் சிங் சிறப்பாக முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் முதல் கால் பகுதி மற்றும் இரண்டாம் கால் பகுதியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்காரணமாக முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 




இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கால்பகுதியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தன. குறிப்பாக இந்திய அணியின் வீரர் ஆகாஷ்தீப் சிங் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. அந்த கால்பகுதியின் இறுதியில் பாகிஸ்தான் அணி ஒரு ஃபீல்ட் கோல் ஒன்றை அடித்தது. மூன்றாவது கால்பகுதியின் இறுதியில் 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து இந்திய முன்னிலை பெற்றது. 


நான்காவது மற்றும் கடைசி கால்பகுதியில் இந்திய அணி கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தது. அப்போது இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்காரணமாக இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. 


 




ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும் (2011,2016,2018), பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய-பாகிஸ்தான் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2016,2018 தொடர்ந்து 2021-ஆம் ஆண்டிலும் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நம்பர் ஒன் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார் சிந்து..