Famous Vinayagar Temples in Tamilnadu: விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான விநாயகர் ஆலயங்கள் இருந்தாலும், புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஆலயம் மற்றும் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகிய ஆலயங்கள் இல்லாமல் தனித்துவமான ஆலயங்களை கீழே காணலாம்.



  1. கூத்தனூர் விநாயகர் ஆலயம்


விநாயகப் பெருமான் என்றாலே யானை முகத்துடன் அருள் தருவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் அருகே அமைந்துள்ளது திலதர்பனபுரி. இந்த கிராமத்தில் முக்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரமுக விநாயகர் எனப்படும் ஆதிவிநாயகர் காட்சி தருகிறார். அதாவது, இந்த ஆலயத்தில் மட்டுமே விநாயகப் பெருமான் மனித முகத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகரே பார்வதி தேவியால் உருவாகிய முதல் விநாயகர் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.



  1. வேலூரில் உள்ள சுயம்பு செல்வ விநாயகர் ஆலயம் :


வேலூரில் அமைந்துள்ள சுயம்பு செல்வ விநாயக ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலை சுயம்பாக உருவாகியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலையை அகழ்வாராய்ச்சி செய்தது முதல் இந்த விநாயகர் சிலைகள் வளர்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இங்கு அமைந்துள்ள விக்கிரக விநாயகரைச் சுற்றி அமைந்துள்ள விநாயகர் சிலையைச் சுற்றிலும் அமைந்துள்ள 10 விநாயகர் சிலைகள் ஓம் என்ற வடிவத்தை உருவாக்குகின்றன.




இந்த சுயம்பு விநாயகர் சிலைகள் அனைத்தும் பூமிக்கு அடியில் புதைந்து இருந்தபோது, அந்த காலத்தில் ​​துக்கோஜி என்ற மகாராஷ்டிர மந்திரி இந்த இடத்தைக் கடந்து சென்றார் என்றும், அப்போது அவரது தேரின் அச்சு உடைந்து தரையில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும், அமைச்சர் கவலையடைந்து விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு அன்றிரவு அவ்விடத்திலேயே தங்கினார் என்றும் கூறப்படும். மேலும், பின்னர் அவரது கனவில் விநாயகப் பெருமான் தோன்றி அவர் இருக்கும் இடத்தைக் கூறினார். எல்லா சிலைகளையும் வெளியே கொண்டு வந்து அந்த இடத்தில் கோயில் கட்டும்படியும் அமைச்சரிடம் இறைவன் கூறினார். செல்வ விநாயகரின் பின்புறத்தில் தேரின் சக்கர தோற்றம் இன்றும் காணப்படுகிறது.



  1. கும்பகோணத்தில் உள்ள பிரளயம் காத்த விநாயகர் :


கும்பகோணத்தில் உள்ள திருப்புரம்பியத்தில் உள்ளது சக்திநாத ஈஸ்வரர் ஆலயம். திரேதயுகத்தின் முடிவில் பூமி 7 கடல்களால் அழிந்தபோது சிவபெருமான் இந்த ஆலயத்தை மட்டும் காக்க விரும்பினார். இந்த பொறுப்பை விநாயகப் பெருமானிடம் வழங்கியுள்ளார். அவர் பிரணவ மந்திரம் மூலம் ஏழு கடல்களையும் ஒரு கிணற்றில் அடக்கியதாக வரலாறு உண்டு.




அந்த ஏழு கடல் கிணறு இன்றும் இந்த ஆலயத்தில் உள்ளது. விநாயகர் சதர்த்திக்கு முதல்நாள் இங்குள்ள விநாயகருக்கு 100 கிலோ தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும் பெயர் உண்டு. தேனைத் தவிர வேறு எந்த பொருட்களாலும் அவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. இந்த அபிஷேகத்திற்கு பிறகு விநாயகர் தங்க நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.



  1. கும்பகோணம், திருவலாஞ்சுழி விநாயகர் :


கும்பகோணத்தின் திருவாலஞ்சுழியில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத சடைமுடிநாதர் ஆலயம். இந்து மத முறைப்படி எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்பும் விநாயகப் பெருமானை வணங்குவது வழக்கம். ஆனால், தேவர்கள் பாற்கடலை கடையும் முன்பு விநாயகரை வணங்க மறந்துவிட்டனர்.




இதனால், அவர்கள் அலையை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். அப்போது, நுரைகளாலே விநாயகப் பெருமானை செய்து வணங்கியுள்ளனர். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் ஸ்வேத விநாயகராக அதாவது கடல் நீரின் நுரையால் உருவாகியவர் என்பதால் அவருக்கு இங்கு மற்ற ஆலயங்களைப் போல அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டும் பொடி செய்யப்பட்டு தெளிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது,



  1. பெரிய முந்தி விநாயகர் ஆலயம், கோயம்புத்தூர் :




கோயம்புத்தூர் புளியங்குளத்தில் உள்ள பெரிய முந்தி விநாயகர் ஆலயத்தில் ஆசியாவிலே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரின் நெத்தி மட்டும் 2.5 அடி அகலமாக உள்ளது. மொத்தமாக இந்த விநாயகர் சிலை 19 அடி 10 இன்ச் உயரத்தில் அமைந்துள்ளது. 11 அடி 10 இஞ்ச் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை மொத்தம் 190 டன் எடை கொண்டது. புகழ்பெற்ற 21 சிற்பிகளால் இந்த விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை மொத்தம் 6 ஆண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.


விநாயக பக்தர்கள் மேற்கண்ட ஆலயங்களுக்கு நேரில் சென்று கண்டிப்பாக தரிசனம் செய்யவும்.