இன்று அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடையானது காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் இன்று அன்ன பிரசாதம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயணம் குறித்து திட்டுமிட்டு கொள்ளுமாறு தேவஸ்தானம் கூறியுள்ளது. 


மேலும், நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி கோயில் நடை காலை முதல் மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் மூடப்படும். அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும் என்றும், அதன்படி பக்தர்கள் பயணத்தை திட்டமிடுமாறு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.


கிரகணம் என்றால் என்ன..? 


சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திப்பே கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்போது அது சந்திர கிரகணம் என்றும் அழைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 4 முறை கிரகணங்கள் தோன்றுகின்றனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, 2022 அன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்தது. இன்று அக்டோபர் 25, 2022 வருவது இரண்டாவது சூரிய கிரகணமாகும். இதுவே இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் கூட. நாளைய சூரிய கிரகணம் வடகிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தெரியும். அதே நேரத்தில் இது இந்தியாவில் பகுதி நேர சூரிய கிரகணமாக தென்படும். 


இன்று பகுதி சூரிய கிரகணம்:


சந்திரனின் நிழல் சூரியனை முழுமையாக மறைக்கும்போது அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்றும் கூறுவர். அதன்படி, இன்று சென்னையை பொறுத்தவரை மாலை 5.15 முதல் 5.45 வரை தோன்ற இருக்கிறது. அதேபோல், திருப்பதியில் சூரிய கிரகணம் மாலை 4.58 முதல் 5.48 வரை நிகழ இருக்கிறது. 


அடுத்த சூரிய கிரகணம் எப்போது?


இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இது பகுதி சூரிய கிரகணமாகப் பார்க்கப்படும்.


ரஷ்யாவின் தெற்குப் பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும். அக்டோபர் 25 அன்று பல இந்திய நகரங்களில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கும்.