திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா பத்தாம் திருவிழாவான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.




முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.




மாசித்திருவிழா ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார். மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.




எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.




இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார். காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். 9ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.




மாசி திருவிழாவின் பத்தாம் நாளான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானை, காலை 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.




பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதி சுற்றிவந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை சரியாக 7.20 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து தேர் ரதவீதி சுற்றி வந்து வந்து சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகள் பவனி வந்து மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.