திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேக விழா- மூலவர் சண்முகர் விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேக விழா-மூலவர் சண்முகர் விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம்

Continues below advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் சண்முகர் விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி ஸ்வாதி நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்த தினமாகும். இதையொட்டி ஆனி ஸ்வாதி நட்சத்திரத்திர தினமான ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,  அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. இதனை தொடர்ந்து மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானைக்குரிய கும்பங்களும், குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பமும், பெருமாள் சன்னதியில் பெருமாளுக்குரிய கும்பமும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது. காலை 9:30 மணிக்கு மேல் மூலவர், வள்ளி, தெய்வானை விமானத்திற்கு போத்திகளும், சண்முக விமானத்திற்கு சிவாச்சாரியார்களும் பெருமாள் விமானத்திற்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் விமான கலசத்திற்கு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சண்முகர் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன்,, இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


Continues below advertisement
Sponsored Links by Taboola