முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.




                                                                 கப்பலில் வந்த தூயபனிமயமாதா


தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் தூய பனிமய மாதா சொரூபம் மரப்பேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் 1555-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது.கி.பி. 1582-ம் ஆண்டு ஏசு சபை குருக்கள் ஒரு சிறிய ஆலயம் கட்டி அந்த ஆலயத்தில் அன்னையின் இந்த சொரூபத்தை வைத்தனர். பின்னாளில், தூத்துக்குடியில் பங்குத்தந்தையாக இருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த விஜிலியுஸ் மான்சி இந்த சொரூபத்தை தென்னங்கீற்றுகளாலும், மண் சுவர்களாலும் ஆன குருக்கள் இல்லத்தில் வைத்திருந்தார்.




                                                                            இடி தாங்கிய அன்னை


இந்த காலக் கட்டத்தில் தான் 1707ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவில் சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமி தங்கியிருந்த அறையில் பயங்கர இடி விழுந்தது. அப்போது இப்பேராலயத்தில் இருந்த சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமியையும் அவரோடு இருந்த சக ஊழியர்களையும் பனிமய மாதா காப்பாற்றினார். மாதா சொரூபமானது இடிதாக்கிய பின்னர், பனிமய மாதா இடி தாங்கிய மாதா என்றே அழைக்கப்பட்டார். இதை உலகுக்கு உணர்த்த விரும்பிய அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி, மின்னல் தாக்கிய கூரையின் நேர் எதிரிலேயே முற்றிலும் கற்களால் ஆன ஆலயத்தை பல இன்னல்களுக்கு இடையே கட்ட ஆரம்பித்தார். 1712 ஏப்ரல் 4-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது.




                                                                       கோடைக் காலத்தில் பனி


அன்னை மரியாளுக்கு உலகிலேயே முதன் முறையாக ரோமில் உள்ள எஸ்கலின் என்ற குன்றின் மீது கி.பி. 352ல் ஆலயம் அமைக்கப்பட்டது. அப்போது போப்பாக இருந்த அருட்தந்தை லிபேரியுஸ் மற்றும் அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் ஆகியோருக்கு அன்னை மரியாள் காட்சி தந்து பனி பெய்யவே முடியாத கோடைக் காலத்தில் பனி பெய்யச் செய்து தனக்கு ஆலயம் அமைக்க வேண்டிய இடத்தை அருளினார்.உலகின் பல பகுதிகளில் பனிமய மாதா சொரூபத்தை கொண்டு பல ஆலயங்கள் கட்டப்பட்டன. அதேபோன்ற ஒரு சொரூபம் தான் தூத்துக்குடிக்கும் வந்து சேர்ந்தது.




                                                                     தூய பனிமய மாதா பேராலயம்


மேலும், எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட அன்னையின் ஆலயமும், தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலயமும் ஆகஸ்ட் 5ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. அதனால்தான் இந்த ஆலயம் தூய பனிமய மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.     




                                                                    அன்னை மரியாளின் திருத்தலை முடி


தூய பனிமயமாதா பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.