தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 442ஆம் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளை குறித்தும் ஆண்டுகளில் மட்டும் தங்க தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 




இன்று மாலை மாலை 5 மணிக்கு திருச்சிலுவை சிற்றலாயத்தில் இருந்து மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. 




நாளை பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 





ஆகஸ்டு 4-ஆம் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். ஆக.5-ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது.திருவிழா ஏற்பாடுகளை பேராலயத்தின் பங்குத்தந்தை டார்வின், உதவி பங்கு தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர் இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.