தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 442ஆம் ஆண்டு திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திற்கு முன்னதாக நேற்று மாலை மாலை 5 மணிக்கு திருச்சிலுவை சிற்றலாயத்தில் இருந்து மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி நடந்தது.




இதனை  தொடர்ந்து தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடைபெற்றது. ஒன்று காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைப்பெற்றது. தொடர்ந்து 8.30 மணியளவில் தூயபனிமய மாதா பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருவுருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது.




கொடியேற்றப்பட்டவுடன் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பல்கள் மூலம் ஒலி எழுப்பட்டது.தூய பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் பால், பழங்கள் உள்ளிட்டவைகளை கொடி மரத்தில் சமர்பித்து மாதாவை வேண்டி கொண்டனர்


இன்று பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.





தூயபனிமய மாதா பேராலயத்தின் 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ஆம் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். ஆகஸ்டு 5-ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது. தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.