தூத்துக்குடி தூயபனிமயமாதா ஆலய 441வது ஆண்டு திருவிழா மற்றும் 16வது தேர் திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கொடிமரத்தில் தங்களது காணிக்கையை செலுத்தினர்.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 16-வது தங்கத்தேர் பவனி நடக்கிறது.




இந்த ஆண்டு பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாதா கொடியை பவனியாக எடுத்து வந்து பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றினார்.




அப்போது புறாக்கள் மற்றும் பலூன் பறக்க பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பலின் மூலம் சைரன் ஒழிக்க இறைமக்கள் மரியே வாழ்க, மரியே வாழ்க என முழுக்க விட்டு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து கொடிமரத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக பால், பழங்களை காணிக்கையாக செலுத்தினர். கொடியேற்றத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்பட்டது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது. இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர். 




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து துவக்கி வைக்கிறார். இதை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி வலம் வர உள்ளது. பகல் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.