மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து ஏழாவது பாடல் மூலம் தனக்கு வேண்டியதை கண்ணபிரானிடம் கேட்கும் வகையிலான இப்பாடலை ஆண்டாள் அமைத்திருக்கிறார்


திருப்பாவை இருபத்து ஏழாவது பாடல் விளக்கம்:


எதிரிகளை எல்லாம் அழித்த கண்ணா…உன் புகழை பாடி நோன்பு இருந்த எங்களுக்கு நீ பரிசு தர வேண்டும்.


நான் உங்களிடம் என்ன கேட்க வந்துள்ளோம் தெரியுமா...


விரத நாட்களில் உணவு, உடை மற்றும் அலங்காரத்தில் கட்டுப்பாட்டுன்  இருந்தோம். ஆகையால் நோன்பு முடித்தவுடன் சிறந்த ஆடை அணிகலன்கள் தரவேண்டும்.


அருள் செல்வத்தையும் தந்தது போல பொருள் செல்வத்தையும் தந்து அருள வேண்டும்,


பால்- நெய் சோறு சாப்பிடும் போது, கையில் வழிந்து முழங்கையில், மழை போல் பொழியும் வகையில் இருக்க வேண்டும். அத்தகைய பிரசாத உணவை உண்ண போகிறோம், நீயும் எங்களுடன் சேர்ந்து சாப்பிட வருவாயாக என கண்ணனை ஆண்டாள் அழைக்கிறார்.


தெய்வ பெண்ணாக காட்சி  தந்த ஆண்டாள், இப்பாடல் மூலம் சாதாரண பெண் இறைவனிடம் கேட்பது போல கேட்கிறார். மேலும், உணவு அருந்தும் போது கூடி அமர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும் என்பதையும் குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார்.


திருப்பாவை இருபத்து ஏழாவது பாடல்:


கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்


   பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்


நாடு புகழும் பரிசினால் நன்றாக


   சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்


   ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு


மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்


   கூடியிருந்து குளிர்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள்:




கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 26: மார்கழி 26: கண்ணனிடம் நோன்புக்கு தேவையான பொருட்களை பரிசாக கேட்கும் ஆண்டாள்…..


தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்….