மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.


திருப்பாவை பத்தாவது பாடல் மூலம், தூங்கி கொண்டிருக்கும் தோழியை நகைச்சுவையாக எழுப்புவது போல் காட்சிபடுத்திய ஆண்டாள், பதினொன்றாவது பாடல் மூலம், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட தலைவனை வணங்க செல்ல, தூக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக என தோழியை ஆண்டால் எழுப்புவது போல பாடல் அமைத்திருக்கிறார்.


பதினொன்றாவது பாடல் விளக்கம்:


கன்று இருக்க கூடிய பசு மாட்டில் இருந்து பால் கறக்க கூடியவர் கண்ணன் என ஆண்டாள் காட்சி படுத்துகிறார். இதன் மூலம் கூற வருவது யாதெனில், மாட்டிலிருந்து பால் கறக்கும் முன், கன்று குடித்த பின்தான் பால் கறப்பர், அதுதான் தர்மம். 


ஆனால், சில நேரங்களில் கன்றுகள் இறந்து விட்டால், வைக்கோலை வைத்து பொம்மை போன்ற கன்றை உருவாக்கி சிலர் பால் கறப்பர். கன்று இல்லையென்றால் பசு பால் சுரப்பது குறைந்து விடும் என்பதால். ஆனால், அது ஆயர் குல நியதி இல்லை, பசுவை ஏமாற்றும் செயல்.


ஆனால் கண்ணன் கன்று இருக்க கூடிய பசுவிடம் மட்டுமே பால் கறக்க கூடிய ஆயர் குல தர்மம் கொண்ட தலைவன் என ஆண்டாள் கூறுகிறார். மேலும், பகைமையை வென்று மக்களை காப்பாற்ற கூடிய தலைவன் என்றும் கண்ணனை ஆண்டாள் புகழ்கிறார்.


அப்படி,புகழ் வாய்ந்த கர்ணனை போற்றி பாட வேண்டும், ஆகையால் சீக்கிரம் எழுந்து வா என்றும் அழகான தோற்றம் கொண்டவளே, மயில் போல இருப்பவளே, உனக்காக அனைத்து தோழிகளும் வாசலில் காத்து கொண்டிருக்கிறோம். 


சீக்கிரம் எழுந்து வா, நீராடி விட்டு கண்ணன் புகழ் பாட வேண்டும் என தோழியை இதர தோழிமார்கள் எழுப்புகின்றனர்.


இப்பாடல் மூலம், செய்யும் தொழில் தர்மத்தையும், கொடுஞ்செயல்களை எதிர்ப்பவனையும் பலரும் போற்றுவர் என குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார்.


திருப்பாவை பதினொன்றாவது பாடல்:


கன்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து


  செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்


குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!


  புற்றர வல்குல் புனமயிலே! போதராய்


சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்


  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட


சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ


எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்


ஆண்டாள்:




கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 10: மார்கழி 10ஆம் நாள்... கும்பக்கர்ணன் தூக்கம்... இந்நாளுக்கு ஆண்டாள் இயற்றிய பாடல் இதுதான்!