அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை என தெரிவித்தனர்.


Thiruparankundram Temple Issue ; மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முண்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக கூறி மாநிலம் முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் காவல்நிலையித்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, அனுமதி அளிக்கவில்லை., என்பதால் பொதுமக்கள் யாரும் இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கு வருகைதர வேண்டாம். என மாநகர காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

 

பேருந்துகளிலும் சோதனை

 

இந்நிலையில் இன்று 2ஆவது நாளாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி வரவுள்ளதாக அறிவித்தால், மதுரை மாநகர் பகுதியில் 2500 காவல் துறையினரும் புறநகர் பகுதியில் 1500 காவல் துறையினர் என 4000 காவல் துறையினர் மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இது போன்ற போராட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, 144 தடை உத்தரவு உள்ளதால் பேருந்துகள், ரயில்கள் மூலமாக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள் என கருதி காவல்துறையினர் பேருந்துநிலையங்களிலும், பேருந்துகளிலும் சோதனையிடுவதோடு, ரயில் நிலையங்களிலும் சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

இந்து முன்னணி சார்பில் மனு

 

இந்நிலையில் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோயிலை நோக்கி வருகை தந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் உள்ளிட்டோர் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோயில் அன்னதான கூடத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கோயில் நடைசாத்தப்பட்ட நிலையில் கோயில் கதவுகள் நடைதிறக்கும் வரை மூடப்பட்டது. இதனிடையே  மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தொடர்பாக இந்து முன்னணி மற்றும்  இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரிய நிலையில். இறுதி நேரத்தில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல என கூறி மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்கில் இந்து முன்னணி சார்பில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

144 தடை உத்தரவு

 

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே  தொடக்கத்திலயே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் அலட்சியத்தை கையாண்டதால் திருப்பரங்குன்றத்தில் இந்து - இஸ்லாமியர் இடையே அசாதரண சூழலை உருவாகும் நிலை ஏற்பட்டு 144 தடை உத்தரவோடு, மாநிலம் முழுவதும் பதட்டத்தை உருவாக்கியது. மேலும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்வாதரமும், இயல்பு வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளதோடு தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கும், சிக்கந்தர் தர்ஹாவிற்கு செல்லும் பக்தர்களுக்கும் மன உளைச்சலையும், பதட்டத்தை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

நாங்கள் மாமன் - மச்சானாக இருந்துவருகிறோம்

 

இந்நிலையில் இது குறித்து பேசிய திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் இந்து - இஸ்லாமியர் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், வெளியூரில் இருந்து வந்து போராட்டம் நடத்துகிறார்கள் எதற்கு இந்த பிரச்னை என தெரியவில்லை, நாங்கள் மாமன் - மச்சானாக இருந்துவருகிறோம், எங்களுக்கு முருகனும் ஒன்னுதான், அல்லாவும் ஒன்னுதான் - அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை என தெரிவித்தனர்.