300அடி  மலை மேல் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு  ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் மலைமீது தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள் சோதனைக்குப் பின்பே பெயர் விவரங்கள் வாங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரமலான் நோன்பு

இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் இந்தாண்டு சிறப்பாக துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் அல்லது ஹிஜ்ரியில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மற்றும் நோன்பு மாதமாகக் கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் ரமலான் 2025 பிப்ரவரி 28 அன்று மாலை தொடங்கியது, அதன்படி இந்த வருட ரமலான் மாதமானது பிப்ரவரி 28 அன்று தொடங்கி (மார்ச் 30) நேற்று மாலை முடிவடைந்தது.
 

ரம்ஜான் கொண்டாடப்படும்

இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதம் இந்த மாதத்தில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவார்கள் இறுதியில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் கொண்டாடப்படும். அதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து வருடம் தோறும்  ரம்ஜான் சிறப்பு தொழுகையை 300அடி திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கக்கூடிய ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில்  தொழுகையில் ஈடுபடுவார்கள். 

தொழுகையில் ஈடுபட்டனர்

அதேபோல் இந்த ஆண்டும் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதி திடல் தொழுகையில் ஈடுபட்டனர். இத்தொழுகையில் மத நல்லிணக்கத்திற்காகவும், நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான ஆட்சி அமைந்திட வேண்டியும், இயற்கை வளங்கள் செழித்து பஞ்சங்கள் நம்மை விட்டு அகல வேண்டும் என்று சிறப்பு துவா செய்யப்பட்டது. இறுதியில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து  ரம்ஜான் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் மலைமீது தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள் சோதனைக்குப் பின்பே பெயர் விவரங்கள் வாங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காஞ்சிபுரம் பட்டு முதல் காட்டன் சேலை வரை அதிரடி ஆஃபர்- எங்கு தெரியுமா?