முருகனின் முதல்படை வீட்டிற்கு கண்டிப்பா வந்து செல்லுங்க கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 


முருகன் வேலுக்கு அபிஷேகம்


 

மிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படைவீடு திருப்பரங்குன்றம். மதுரை மாநகரின் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கு திசையில் உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வடக்கு முகம்பார்த்து அமைந்திருக்கிறது. சூர சம்ஹாரத்தை நிகழ்த்திக் காட்டி வாகைசூடி வந்த முருகனுக்கு தெய்வானையை திருமணம் முடித்துக் கொடுத்த இடமாகும். வீரன் முருகனின் வேலுக்கு மட்டும் அபிஷேகம் இங்கு மட்டும் நடப்பது சிறப்பானது.

 

எல்லா இடங்களிலும் அமர்ந்த நின்ற கோலத்தில் இருக்கும் முருகன் இங்கு தெய்வானையை மணந்த கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். திருமண கோலத்தில் அருள் பாலிக்கும் முருகன் சுப்பிரமணிய சுவாமி எனும் நாமத்தால் அழைக்கப்படுகிறார். சுப்பிரமணியரின் அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி மேலே சூரியன் சந்திரன், கந்தகுகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே தன்னுடைய சிறப்பு வாகனமான யானையும், ஆடும் உள்ளது.

 

பஞ்ச தெய்வங்களும் ஒரே இடத்தில்


குடைவரை மூர்த்தியாக இருக்கும் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று முருகனின் வேல் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. சூரனை வென்ற வேலுக்கு இந்த கோயிலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 

நக்கீரர், அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், பாம்பன் சுவாமி, திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. விநாயகப் பெருமான் கற்பக விநாயகராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பரங்குன்றம் கோயில் ஏழு ராஜ கோபுர நிலைகளைக் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை சுமார் 190 அடியில் அழகனின் குன்றாக அமைந்திருக்கிறது. சிவபெருமான், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை அம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தில் ஒட்டி ஒரே குடைவரையில் அருள்கின்றது சிறப்பான ஒன்று.

தந்தைக்கு பதில் மகன்


திருப்பரங்குன்றம் கோயில் விழாக்களின் போது சிவனுக்கே கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனால் வீதி உலாவின் போது முருகனே செல்கிறார். முருகன் சிவ அம்சமானவர் என்று போற்றப்படுவதால் தந்தைக்கு பதில் மகனே வீதி உலா செல்கிறார். இங்கு முருகனுக்கு சோமசுப்பிரமணியர் என்ற பெயரும் உள்ளது. சோமன் என்றால் சிவன் என்ற பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதர் அருளுகிறார்.

 

திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிய பின்னர் தான் மற்ற சாமிகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் சிவபெருமான் மலை வடிவத்தில் அருள் பாலிக்கிறார். தெய்வானை -  முருகனும் திருமணம் செய்த இடமாக இருப்பதால் முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிவபெருமான் தளம் திருப்பரங்குன்றமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் ஆணி பௌர்ணமியின் போது சிவனுக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சிவன் கிழக்கு பார்த்து தனிக்கரவையிலும் இருக்கிறார்.

வெற்றி கொடுக்கும் வேல்


திருமணம், புத்திர தோஷங்கள், விளையாட்டு போட்டியில் வெற்றி, போட்டித் தேர்வில் வெற்றி, பள்ளி கல்லூரி தேர்வில் வெற்றி பெறுவது என வெற்றியை நோக்கி நகரும் நபர்கள் சுப்பிரமணியனையும், அவனது வேலையும் வணங்குவது நம்பிக்கையாக உள்ளது. வைகாசி விசாகம் ஆடி கிருத்திகை,  புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கை தீர்த்தமாக பார்க்கப்படுகிறது. முருகனின் முதல்படை வீட்டிற்கு கண்டிப்பா வந்து செல்லுங்க கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.