தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா, பதுமை (பொம்மை) பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது.

இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தை பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது,  இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து, ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது.

இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி மாத உற்சவம், கண்ணாடி பல்லாக்கு, மற்றும் வெட்டிவேர் பல்லாக்கு ஆகியன ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா கடந்த 11ந் தேதி நடைபெற்றது, இதனையடுத்து கண்ணாடி பல்லாக்கு ஏழுர் சுற்றி நேற்று நள்ளிரவு 12ந் தேதி கோவிலுக்கு வந்ததும் பதுமை (பொம்மை) பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கருணாசுவாமி என்கிற ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளினர், அதேபோல் வெட்டிவேர் பல்லாக்கில் மணக்கோலத்தில் ஸ்ரீ  அருந்ததி தேவி உடனுறை ஸ்ரீ வசிஷ்டர் சுவாமிகள் எழுந்தருளினர், அப்போது பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே சுவாமிக்கு பொம்மை பூ போட்டது, 

பின்னர் சுவாமிகளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்தபடி கோவிலில் வலம் வந்தனர், இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.