சுற்றுலா என்பது ஓரிடத்தில் வாழும் மக்கள் பிற பகுதிகளை சேர்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், சடங்குகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.



சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மனம் மகிழ்வுக்கும், நாம் வசிக்கும் இடத்தை தவிர பிற இடங்களில் உள்ள நாகரீகம், பண்பாடு வளர்ச்சி போன்றவற்றை அறிந்து கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது.

சுற்றுலா மூலம் புதிய புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளைப் பற்றி புரிந்து கொள்ளவும் முடியும். அங்குள்ள கட்டிடக்கலை, முக்கிய இடங்கள், வாழ்ந்த மனிதர்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். மேலும், அன்றாடம் உழைத்து, உழைத்து அலுத்துப் போன தொழிலாளிக்கு சுற்றுலா இன்பம் தருகிறது என்றால் மிகையில்லை.

இயற்கையின் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள், பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக்காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள், கோயில்கள், மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை சுற்றுலா செல்வதன் மூலம் ரசிக்க முடியும். ஆனால் இவற்றுக்கெல்லாம் தடையை ஏற்படுத்தியது கொரோனா. ஊரடங்கு, அதற்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்வானாலும் பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை என்று மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

குறிப்பாக ஆண்டுதோறும் மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும் சிக்கலை சந்தித்தனர். மாலை அணிந்து விரதமிருந்து கேரளா சபரிமலைக்கு யாத்திரையாக செல்லபவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு பின் வந்த காலக்கட்டத்தில் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கமாக மாலை அணியும் பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையால் வேதனையடைந்த போது சபரிமலைபோல் தமிழகத்தில் அமைந்த பல ஐயப்பன் கோயில்களுக்கு சென்று வந்தனர். அங்கு சென்று ஐயப்ப சுவாமியை வழிப்பட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய தருணங்களும் நிறைய நடந்தது.

சபரிமலை தரிசனம் ஆனந்தத்தைத் தருவது. ஐயப்பன் என்ற ஒற்றைச்சொல்லே ஒரு மந்திரச் சொல்லாக பக்தர்களுக்குப் பரவசத்தை ஊட்டுவது. அதுபோன்று நம் தமிழகத்திலும் ஐயப்பன் அருளும் பல திருக்கோயில்கள் இருக்குங்க. அது கொரோனா காலத்தில் நம் பக்தர்களால் கண்டு மகிழப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர்வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். சபரிமலைக்கு செல்லமுடியாத ஐயப்ப பக்தர்கள் இங்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதேபோல் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் எங்கெங்கு ஐயப்ப சுவாமியின் கோயில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்றனர். அதில் திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கும் வந்து வழிப்பட்டனர்.

அதுபோல் காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கு தஞ்சை மேல அலங்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் பற்றி தெரியவந்து அங்கு குவிந்தனர். வழிபட்டனர். மனமுருக வேண்டினர். எங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிய வேண்டுமென பிரார்த்தனை நடத்தினர்.

மண்டல விரதம் முழுமையாக இருந்து சபரிமலை செல்ல முடியவில்லை என்ற வேதனையை ஓரங்கட்டி தஞ்சை மேல அலங்கம் வந்து பிரார்த்தித்து மன சஞ்சலத்தை விட்டொழித்து வேண்டுதல்களை நிறைவேற்றிச் சென்றனர். கொரோனா கொடுமையான காலமாக இருந்தாலும் அதனால் நம் ஊரிலும் உள்ள பல்வேறு கோயில்கள் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதுவும் நன்மைக்குதானே. இப்போது தஞ்சை மேல அலங்கம் ஐயப்ப சுவாமி கோயிலும் இப்போது பிரசித்தம் பெற்றுள்ளது. சபரிமலைக்கு செல்பவர்கள் இப்போதும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருகை தருகின்றனர்.