தஞ்சாவூர்: தைப்பூசத்தை ஒட்டி தஞ்சையில் உள்ள அறுபடைவீடு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.


தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அசுரர்களை அழிக்க முடியாமல் தேவர்கள் திணறினர். எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். இதையடுத்து கருணைக்கடலான எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று உருவாக்கிய அவதாரமே கந்தன்.


சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றி நிம்மதி அடையச் செய்தார். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களை காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.




முருகப்பெருமானுக்கு உகந்தநாள் தைப்பூச தினம் ஆகும். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்படும். மேலும் பக்தர்கள் கொண்டு வரும் பால்குடங்களைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.


இந்த தைப்பூச தினத்திறக்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரம் இருந்து முருகன்கோவிலுக்கு பாதயாத்திரையாகவும் சென்று வழிபடுவார்கள். தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும். தொட்ட காரியம் கை கூடும் என்பது ஐதீகம். அதன்படி தைப்பூச நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் , வழிபாடு நடைபெற்றது.


முருகனுக்கு அறுபடைவீடுகள் உள்ளது போல தஞ்சையிலும் அறுபடை வீடுகள் உள்ளன. தஞசை மேலவீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் (முதல்படை வீடான திருப்பரங்குன்றம்), பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் (2-ம்படை வீடான திருச்செந்தூர்), சின்னஅரிசிக்காரத்தெரு பாலதண்டாயுதபாணி கோவில் (3-ம் படைவீடான பழனி), ஆட்டுமந்தை தெரு சுவாமிநாதசுவாமி கோவில் (4-ம் படை வீடான சுவாமிமலை), கீழவாசல் குறிற்சி தெரு பாலதண்டாயுதபாணி (5-ம் படைவீடான திருத்தணி), வடக்கு அலங்கம் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் (6-ம் படைவீடான பழமுதிர்ச்சோலை) விளங்குகிறது.


இந்த கோவிலக்ளில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சை காமராஜர் மார்க்கெட் பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் முருகன், வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிேஷேகம் செய்யப்பட்டதையொட்டி சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. தஞ்சை பெரியகோவிலில் உள்ள முருகன்கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.