தஞ்சாவூர்: திருமணத்தடை உள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அமைந்துள்ள சோற்றுத்துறை நாதர் கோயிலில் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமண திருவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 

தஞ்சை மாவட்டம் திருச்சோற்றுத்துறையில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் சோற்றுத்துறை நாதர், ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர் என்று அழைக்கப்படுகிறார். அம்மன்அன்னபூரணி, தொலையாச்செல்வி என்று அழைக்கப்படுகிறார். தல விருட்சமாக வில்வம் உள்ளது. இத்தலத்து தீர்த்தம் காவிரி, சூரிய தீர்த்தம், குடமுருட்டி ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

 

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 13வது தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை ஆகும்.



 

திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தானத் தலங்களில் இது மூன்றாவது அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.

 

பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார். நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும் பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில் திருமணம் நடைபெறும். சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம் நடக்கும். அதன் நிறைவு நாளில்  நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர்.

 

ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் வருவர். காலை ஆறு மணிக்குத் திருவையாறில் புறப்படும் இவர்கள் முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும் போது ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள அடுத்த இடமாக திருச்சோற்றுத்துறைக்கு வருவர். எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும், அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து செல்வர். இதுதான் தல பெருமையாகும்.

 

திருச்சோற்றுத்துறை கோயில் உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை அருள்பாலிக்கிறார். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் பெயர்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும், பிணியும் விலகும். ராஜ கோபுர வாயிலில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன். தெற்குப் பிரகாரத்துக்குள் கிழக்குப் பார்த்த படி ஆறுமுகன் அருள்பாலிக்கிறார். கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணுவும், அடுத்து கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே சென்றால் சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் அருள்பாலிக்கிறார்.

 

திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமணதிருவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இத்தலத்தில் சப்தஸ்தான விழா, சித்திரை விசாகம், ஏழூர் திருவிழா மிகப் பிரசித்தம்.