கரூர் அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.




காசி விசுவநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்:


கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் உடனுறை விசாலாட்சி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா  சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது.


 




ஆயிரக்கணக்கான பக்தர்கள்:


அதைத்தொடர்ந்து நான்காம் கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு யாகசாலை புனித தீர்த்த குடத்திற்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாரதனை காட்டினார். அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் கோபுர கலசம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா என்ற கோஷங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.


 




அதை தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் காசி விஸ்வநாதர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானமும், பிரசாத பைகளும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காசி விசுவநாதர் ஆலய  நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial