தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை பழனியில் ”அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு” தொடங்குகிறது.  இதனால், பழனியே விழாக்கோலம் பூண்டுள்ளது. பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை, கல்லூரியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனை திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முருக பக்த சிந்தனையாளர்கள் என திரளானோர் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.


எதற்காக இந்த மாநாடு ?


தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் திருமுருக வழிபாடு என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் பல்வேறு பெயர்களை முருகனுக்கு சூட்டி வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில், உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.


ஆய்வு நோக்கில் முருகனை நிறுவும் முயற்சி


முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


மாநாட்டின் குறிக்கோள்கள் என்னென்ன ?



  • முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.

  • முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .

  • மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.

  • முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து  ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.

  • அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்


ஆகிய 5 குறிக்கோள்களை மையமாக வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.


அதே மாதிரி, இந்த மாநாட்டினை பழனியில் நடத்த பல்வேறு சிறப்புகள் இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதில்,



  • முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.

  • முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.

  • நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.

  • ‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.

  • ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை


கட்டுப்பாட்டு அறையில் சந்தேகங்களை கேட்கலாம்


இந்த முருக மாநாட்டினையும் அங்கு நடைபெறும் விவாதங்கள், சிந்தனைகள், ஆய்வு அரங்கங்கள் என அனைத்து விவரங்களை பொதுமக்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.  இலவசமாக சென்று பார்க்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இணையதளம் வாயிலாக இந்த மாநாட்டில் பங்குபெற பதிவு செய்தவர்களும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.


மாநாடு குறித்த விவரங்களை 04545-241471, 04545-241472, 04545-241473 என்ற எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


நேரலையிலும் காணலாம்


நேரடியாக கருத்தரங்கங்களை பழனிக்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்காக அதனை தொலைக்காட்சி, இணையதளம் மூலம நேரலை செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.