தரங்கம்பாடி அருகே உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது குடும்பத்தினருடன் ஆயூஷ் ஹோமம் செய்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான  தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது. 




மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான் 


புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 




மேலும் பல சிறப்புகள் 


அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வழிபாடு


இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க கோயிலில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது 75 ஆவது வயதை பிறந்தநாளை  முன்னிட்டு மனைவிகள் ஜெயந்தி மற்றும் கற்பகம், மகள், மருமகள்கள், மருமகன், பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்களுடன் கோயிலுக்கு வருகை தந்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் நீண்ட ஆயுள் வேண்டி  சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகளுடன் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.


Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!




அதனை அடுத்து பூஜிக்கப்பட்ட கலச நீரை கொண்டு, தம்பதியினருக்கு தெளிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது‌. பின்னர் இரண்டு மனைவிகளுடன் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தம்பதியர்கள் இனிப்பு ஊட்டிக்கொண்டனர். குடும்பத்தினருடன் கோயிலுக்கு உள்ளே சென்று கோயிலை சுற்றி வந்து, கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார்.