விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி தொகுதி:


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட விரும்புவோர் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


அதன்படி, மொத்தம் 56 வேட்பாளர்கள் சார்பில்  64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையின் முடிவில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாரேனும் திரும்பப் பெற விரும்பினால் இன்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. 


இந்நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வேட்பாளர்கள்:


இதில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா, பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதால், இது  திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான மும்முனைப்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல்:


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில், பதிவான வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.