கரூரில் மண்டல அபிஷேக 48-ம் நாள் முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூல விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.


 




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து 1008 சங்குகளால் பல்வேறு நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்களை ஊற்றி வைத்து சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் யாக வேலியை சிறப்பாக நடத்தினார். 108 சங்குகளுக்கும் தீர்த்த கலசத்திற்கும் உதிரிப்பூக்களால் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டினார்.


 




 


மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர் பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு , திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம்,  குங்குமம் , அபிஷேக பொடி , கரும்புச்சாறு, விபூதி ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வகையான வண்ண மாலைகள் அணிவித்து தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான குரு பகவான், ஆஞ்சநேயர், ஐயப்பன், கன்னிமூல விநாயகர், பாலமுருகன், துர்க்கை அம்மன், விஷ்ணு மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


மூலவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தங்க கவசம் சாற்றப்பட்டது . தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.