தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்றாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் இந்த மாதத்தில் எந்த நாளில் செய்யும் நல்ல காரியங்களும் புண்ணியம் தரும் நாளாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



எப்போது பிறக்கிறது புரட்டாசி:


ஆவணி மாதத்திற்கு பிறகு பிறக்கும் புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17ம் தேதி பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறக்க இன்னும் 7 நாட்களே இருப்பதால் தற்போது முதலே வைணவ தலங்கள் களைகட்டி காணப்படுகிறது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதம் வரும் 17ம் தேதி முதல் அடுத்த மாதமான அக்டோபர் 17ம் தேதி வரை வருகிறது.


புரட்டாசி மாதத்தில் ஏராளமான சிறப்புகள் இருந்தாலும் நடப்பாண்டிற்கான புரட்டாசியின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பௌர்ணமி திதியாக அமைகிறது. இந்த நாளில் சத்யநாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


எந்தெந்த நாளில் என்னென்ன சிறப்பு?


பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருகிறது. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் ஏகாதசி திதி வருகிறது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதமும், விஜயதசமியும் வருகிறது.


அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை நாட்களும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் சூழலில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தனிசச்சிறப்பு வாய்ந்தது ஆகும். வரும் அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுவதால் அன்றைய நாளில் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.


களைகட்டும் வைணவ தலங்கள்:


புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதம் என்பதால் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்து காணப்படுவது வழக்கம். புரட்டாசி மாத பிரமோற்சவ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழ்நாட்டிலும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட பல கோயில்களில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.