குல தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மாசி மகா சிவராத்திரி கொடை நாளிலோ, பங்குனி உத்திர நாளிலோ குல தெய்வத்தை வணங்க நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும் ஓடி வந்து விடுவார்கள். நம் கூடவே இருந்து நம்மை காக்கும் குல தெய்வங்களை வணங்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.




ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பதும் நம்பிக்கை. பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை.




குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து. இதற்காகத்தான் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. அதே போல கிரகங்களின் கோசார பலன்களும்.கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.




குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவோ, ஆண் தெய்வங்களாகவோ இருப்பார்கள். குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன. மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. படிப்பு, வேலை என்று வெளியூர், வெளிநாடு போனவர்கள் குலதெய்வத்தை மறந்து விடுவார்கள். இதனால் குல தெய்வ தோஷம் ஏற்படும். பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.




குல தெய்வ வழிபாடுகளை வருடத்திற்கொருமுறை செய்ய வேண்டும். மாசி மகா சிவராத்திரி, மாசி அமாவாசை, பங்குனி உத்திரம் நாட்களில் அவரவர்கள் குல தெய்வத்தினை முறைப்படி வணங்க வேண்டும். காரியத்தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். குலதெய்வ கோவிலில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் கோடி நன்மை தரும். பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்திற்கு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும் என்பது ஐதீகம்.