காஞ்சிபுரம் கோயில் நகரமாக விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரபலமான பல கோயில்கள் உள்ளன. அதிக கோயில்கள் உள்ள காரணத்தினால், காஞ்சிபுரம் ஆன்மீக சுற்றுலா தளத்திற்கு ஏற்ற நகரமாக உள்ளது. அதேபோல் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் உள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மிக முக்கிய நகரமாக உள்ளது.
 
காஞ்சிபுரத்தை பொறுத்தவரை காமாட்சியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபிரவேஸ்வரர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரக்கோட்டம் முருகர் கோயில் என ஏராளமான முக்கிய கோயில்கள் உள்ளன. இவற்றில் உலக அளவில் பிரசித்த பெற்ற கோயிலாக வரதராஜ பெருமாள் கோயில் விளங்குகிறது. "40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும், அத்திவரதர் வைபவம்" விழா காரணமாக இந்த கோயில் மிக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
 
இத்திருக்கோவில் தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலத்திலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்  இத்திருக்கோயிலில் உள்ளே உள்ள நரசிம்மன் சன்னதியில், பூஜை முறையில் கிட்டு மற்றும் ராகவன் ஆகிய இருவர் பட்டாச்சாரியார்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார். இந்நிலையில் இருவருக்கும் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.  இரண்டு பட்டாசியார்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.