எதிர்ப்பு ஏதும் இன்றி கோலாகலமாக நடந்த திருவாவடுதுறை பட்டணப்பிரவேசம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் 24 -வது ஆதீன குருமகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் பல்லக்கை சுமந்து பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. 

Continues below advertisement

ஆதீனகர்த்தர் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைர மோதிரங்கள் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் நடைபெற்ற பட்டணப்பிரவேச விழாவில் வீடுகள்தோறும் பூரண கும்ப மரியாதையுடன் தீபாரதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர் 

Continues below advertisement

திருவாடுதுறை ஆதீனம் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் தழைத்தோங்க செய்யும் இவ்வாதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேசம் விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. 


பட்டணப்பிரவேசம் விழா 

இந்த ஆண்டு பட்டணப்பிரவேசம் விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு சமூக பணி சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான 10-ஆம் திருநாளான நேற்று நள்ளிரவு ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 


ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம்

விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள் மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாகோலம் பூண்டது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அதனை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைர மோதிரங்கள் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார். 


அதிகாலை வரை நடைபெற்ற விழா

பின்னர், பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க, 30 நாதஸ்வரம் தவில்வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து, ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் அதிகாலை வரை நடைபெற்றது. அப்போது வழியெங்கும், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கடந்த கால எதிர்ப்பு 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை மனிதன் சுமந்து செல்லும் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் பட்டிண பிரவேசம் நிகழ்வு நடைபெற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வு அரசு தடைவிதித்தது. தொடர்ந்து பாஜக, அதிமுக, இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு ஆதரவு குரல் எழுப்பியதை அடுத்து பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மீண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதனை கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் பட்டணப்பிரவேசம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola