வைத்தீஸ்வரன் கோயில் அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் சௌந்தரநாயகி உடனாகிய சிவலோகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத சனி பிரதோஷ வழிபாடில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.


திருப்புன்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலைஅடுத்த திருப்புன்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக விற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த தீவிர சிவபக்தரான நந்தனார் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புன்கூர் தளத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது அவர் சிவபெருமானை தரிசிக்க சென்ற போது அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


சூரசம்ஹாரம் நடைபெறாத முருகர் கோயில்... திருத்தணி முருகர் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?




விலகி நின்ற நந்தி பகவான் 


இதனால் கோயிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார். ஆனால், கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை.


தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டி நந்தனார் காத்திருந்தபோது, தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணித்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகி இருந்தார்.


அப்போது வாசலில் இருந்தே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டி வேண்டியதாக கோயில் வரலாறு தெரிவிக்கின்றது. இன்றளவும் இக்கோயிலின் ராஜ கோபுரத்திற்கு வெளியே நின்றே மூலவரை தரிசிக்கும் வகையில் நந்தி பகவான் விலகியே இருப்பார். 


கரூர் ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆவணி மாத சனி பிரதோஷம்




ஆவணி மாத சனி பிரதோஷம் 


இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் ஆவணி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி, தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 


அதனை தொடர்ந்து புதிய அங்க வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல், வில்வ இலை மற்றும் பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் நந்தி பகவானுக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவலோகநாத சுவாமியையும் பக்தி பரவசம் பொங்க வழிபாடு செய்தனர்.


Sani Pradosham : திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சனி பிரதோஷம் கோலாகலம்