சீர்காழி சட்டைநாதர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 




திருஞானசம்பந்தர் வரலாறு


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 




சித்திரை பெருவிழா


இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாளான இன்று திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர். 




முக்கிய நிகழ்வுகள் 


முன்னதாக இவ்வாண்டுக்கான திருமுறை கலாநிதி பட்டம் விருத்தாசலம் சங்கரன் ஓதுவாருக்கு வழங்கப்பட்டது. திருமலைப்பால் விழாவில் மற்றொரு நிகழ்வாக திருஞானசம்பந்தர் திருக்கோளக்காவிற்கு எழுந்தருளி திருப்பதிகம் பாடி பொற்றாலம் பெற்று பள்ளத்தில் சீர்காழி மீண்டருளும் காட்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்திருந்தனர். சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வுகளாக 19 -ஆம் தேதி திருக்கல்யாணம், 22 -ஆம் தேதி திருத்தேர், 28 -ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.