சீர்காழி சட்டைநாதர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 




திருஞானசம்பந்தர் வரலாறு


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 


Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்




 


சித்திரை பெருவிழா திருக்கல்யாண வைபவம் 


இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாள் நிகழ்வாக திருமுலைப்பால் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆறாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்பாள், பிரம்மபுரீஸ்வரர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரம் ஓதி யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வுகள் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.




இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபத்தை கண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்திருந்தனர். சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வான ஏப்ரல் 22 -ஆம் தேதி திருத்தேர், ஏப்ரல் 28 -ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.


Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு