மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும்.  இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.




இதனைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருவாவடுதுறை ஆதீனம் முடிவெடுத்து திட்டமிடப்பட்டு 2022 -ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது கோயில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவுற்று  மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த புதன்கிழமை  123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக  கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்கு  கொண்டுவரப்பட்டு துலாக்கட்ட காவிரியில் இருந்து யானை மீது அவற்றை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆலயம் வந்தடைந்தது.




புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ஆவாகனம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிவநெறி சொற்பொழிவுகள், இன்னிசை மற்றும் பரதநாட்டிய கச்சேரி, 82 மணி நேரம் தொடர்ச்சியாக அகண்ட பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.




தொடர்ந்து நேற்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மகாபூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்துனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை  நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை மயிலாடுதுறை  மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.




தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து , மயூரநாதர் அவையாம்பாள் திருக்கல்யாணம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. மயூரநாதர், அவையாம்பிகையுடன், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.




பின்னர் திருமண கோலத்தில்  மாயூரநாதர் - அவையாம்பிகையுடன் விநாயகர், முருகன், சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் 3 புஷ்ப பல்லக்கில் ப்கதர்களுக்கு காட்சி தந்து திருவீதியுலா நடைபெற்றது. சிவன், விநாயகர், வேல் போன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்குகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது. யானை அபயாம்பிகை முன்னே செல்ல சிவகைலாய வாத்தியங்கள் அதிர 20 நாதஸ்வர தவில்வித்வான்களின் மேளதாள வாத்திய கச்சேரிகளுடன் சிறப்பாக நடைபெற்ற திருவீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் திருமண கோலத்தில் வந்த மாயூரநாதர் அபயாம்பிகை உள்ளிட்ட பஞ்சமுர்த்திகளை தரிசனம் செய்தனர்.