மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுவதாக புராணம் தெரிவிக்கின்றது.
இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள்.
சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க மயிலாடுதுறை காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 -ஆம் நாள் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற துலா உற்சவ, கடை முக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களான மயூரநாதர், ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் ஆலயங்களிலிருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு கரைகளிலும் கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற்றது.
கடைமுகத் தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். காவிரி ஆற்றின் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு கரைகளிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடை முக தீர்த்தவாரி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து புனித நீராடி வருகின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.