பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆடி மாத பூரத்தை ஒட்டி உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  

மருத்துவா சூரனால் தாக்குதலுக்கு உள்ளான நந்தி பகவான்

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார். தொடரும் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கியதாக புராண வரலாறு. அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோயிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிவபெருமானிடம் சரணாகதி அடைந்த மருத்துவா சூரன் 

இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தி சுவாமி மருத்துவா சூரன் என்ற அசுரனை சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான சத்தியோஜாதம் அகோர மூர்த்தியை மாசி மாதம் பிரதமை திதியில் பூர நட்சத்திரத்தில் கூடிய நாளில் நெருப்பு பிழம்பாக உருவில் தோன்றினர். அதனை கண்டதும் மருத்துவா சூரன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான் பின்பு மருத்துவா சூரன் சிவபெருமானிடம் தான் கண்ட ரூபத்தில் திருவெண்காடு ஸ்தலித்தில் எழுருந்தளி பக்தர்களின் வேண்டுகோள் அனைத்தையும் நிறவேற்றிதர வேண்டுகோள் வைத்தார். அதன்படி இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து ஸ்ரீ அகர மூர்த்தி சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

சிறப்பு அபிஷேக ஆராதனை

ஆடி மாத பூரத்தையோட்டி உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், நாட்டு சக்கரை, பழச்சாறு, விபூதி, தயிர், பால் , பன்னீர், சந்தனம், உள்ளிட்ட மங்கள பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அகோர மூர்த்திக்கு பலவண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாத பூரம் தினத்தில் அகோர மூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது குறிப்பிட்ட தக்கது.