சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் விழாவாக திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
திருஞானசம்பந்தர் வரலாறு
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது.
சித்திரை பெருவிழா
இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2-ம் நாள் உற்சவமான திருமுலைப்பால் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர்.
திருக்கல்யாண உற்சவம்
சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான ஆறாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் மங்கள நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருகல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் சுவாமி அம்பாள் புஷ்ப விமானத்தில் இரவு புறப்பாடாகி இன்னிசை நாதஸ்வர கச்சேரியுடன் வீதி உலா சென்றனர்.
முக்கிய நிகழ்வுகள்
தொடர்ந்து 8-ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 13-ஆம் தேதி தெப்ப உற்சவம், 23 -ம் தேதி முத்து சட்டைநாதர் உற்சவமும் நடைபெற உள்ளது.