தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளின் அவதார திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு அவரது பக்தர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.


பழமையான தருமை ஆதீனம் 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16 -ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான சைவத் திருமடம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். 




ஆதீன மடாதிபதி பிறந்தநாள் 


இந்நிலையில் குருமகா சன்னிதானத்தின் அவதாரத் திருநாள் ( பிறந்தநாள் ) மற்றும் மணிவிழா ஆண்டு துவக்கம் புனர்பூசம் நட்சத்திர தினத்தில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அதிகாலை திருமடத்தில் சொக்கநாதர் பூஜை செய்தார். தொடர்ந்து மணிவிழாவை ஆண்டாக இந்தாண்டு முழுவதும் தினமும் ஒரு நூல் வீதம் 365 நூல்கள் வெளியிடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாலவாயுடையார் பயகர மாலை என்னும் நூலை குருமகா சன்னிதானம் வெளியிட்டார். 




கலசபிஷேகம்


அதனை தொடர்ந்து அவர் 25 வது குருமகா சன்னிதானத்தின் குருபூஜை வழிபாடு செய்த பின்னர் குரு மூர்த்தங்களில் குருவார வழிபாடு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்ற தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் சங்கு மண்டபத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் உக்ரரத சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டு, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுரம் ஆதீன கர்த்தருக்கு கலசபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 




வழிபாடு 


தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, முருகப்பெருமான் மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து திருமடத்திற்கு திரும்பிய தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஆதீன கோயில்களின் பிரசாதம் பார்த்தார். அதனையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தின் தந்தை மறைஞான சம்பந்தர், சகோதரர்கள் வெற்றிவேல், விருதகிரி, கார்த்திகேயன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்க்கோனி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.




குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான மார்கோனி. இவர் கல்வி, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல் என ஏராளமான சேவைகளை தனது சொந்த வருமானத்தில் செய்து வருகிறார். இந்நிலையில் தீவிர தருமபுர ஆதீனத்தின் பக்தரான இவர் தருமபுரம் ஆதீனத்தின் அறுபதாவது பிறந்தநாளை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆதீனம் பிறந்த தினத்தில் பிறந்த பிறந்த குழந்தைகளுக்கு மார்கோனி பவுண்டேசன் சார்பில் 32 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.




அதற்கான நிகழ்வு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று, பச்சிளம் குழந்தைளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் அணிவித்து அருளாசி கூறினார்.