கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.


 


 


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழாவை முன்னிட்டு  மாலை 05.30 மணிக்கு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


 


 




 


தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 




 


தொடர்ந்து மாசி மாத மகா சிவராத்திரி முன்னிட்டு  இரவு 9:00 மணிக்கு முதல் கால அபிஷேகமும், இரவு 12 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகமும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு நான்கு நான்காம் கால அபிஷேகமும் நடைபெற்றது.