மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா;  4ஆம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் விறகுவிற்ற லீலை அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

 

பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே

 

அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் சக்தி போராடியதையே நவராத்திரியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகிறது. இந்த நவராத்திரியின் புராணக் கதைகள் உணர்த்தும் உண்மை பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே ஆகும். இதன் காரணமாகவே, அம்பிகை வெற்றி பெற்ற 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். நவராத்திரி பிறந்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

 


 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் பக்தர்கள் மகிழ்ச்சி

 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 3-ம் தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலித்தார், மூன்றாம் நிகழ்வில் முத்தங்கி சேவை நிகழ்த்தி காட்டினர் இந்நிலையில் 4ஆம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் விறகு விற்ற லீலை அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

 

தலையில் விறகும், கையில் யாழிசை கருவியுடன் மீனாட்சியம்மன்







 

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2- ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு  மண்டபத்தில் மீனாட்சியம்மன் விறகு விற்ற லீலை சிறப்பு அலங்காரத்தில் தலையில் விறகும், கையில் யாழிசை கருவியை வைத்தவாறு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட  கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.

 



பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்


 


நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். விறகுவிற்ற லீலை சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர். நவராத்திரி நிகழ்ச்சியினை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறோம். விறகு விற்கும் லீலை சிறப்பாக நடைபெற்றது. எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.