திருப்பதி திருமலையான் கோயில் உலகப்புகழ்பெற்ற கோயில் ஆகும். தினசரி இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் என்றாலே வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடத்தப்படுவது வழக்கம். திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.



கொடி மரம் உடைந்ததா?


திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மலையப்ப சுவாமி நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றுவதற்கான வளையம் உடைந்து விழுந்ததாகவும், இது மிகப்பெரிய அபசகுணம் என்றும் தகவல் பரவியது. ஏற்கனவே லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த தகவலும் பரவியது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.


உண்மையில் நடந்தது இதுதான்:


 இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், தேவஸ்தானம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. பிரம்மோற்சவத்திற்கு முன் ஒவ்வொரு விஷயங்களையும் சரி பார்ப்பது வழக்கமாக உள்ள நடைமுறை. ஏதாவது ஒரு பொருள் பொருத்தமற்றதாகவோ அல்லது சரியில்லாமலோ இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அது அகற்றப்பட்டு, புதிய பொருட்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடத்தப்படுவது வழக்கம். திருமலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.


கருட கொடி ஏற்றப்பட்டும், தங்க கொடி மரத்தின் கொக்கிகள் சரிபார்க்கும் பணிகளும் நடத்தப்பட்டது. அப்போது, பழைய கொக்கிகள் அகற்றப்பட்டு, புதிய கொக்கியை மாற்றி அமைக்கும் பணியில் கோயில் அர்ச்சகர்கள் ஈடுபட்டனர். ஆனால், வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கும் முன்பே அசம்பாவிதம் நடந்து விட்டதாகவும், இது அபசகுணம் என்றும் தவறான தகவலை சிலர் பரப்பியது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற வதந்திகளை ஏழுமலையான் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என திருமலை திருப்பத தேவஸ்தானம் சார்பில் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


பக்தர்கள் நிம்மதி:


திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கொடி மர விவகாரம் பக்தர்கள் மத்தியில்  கவலை அளித்த நிலையில், தேவஸ்தானம் அளித்துள்ள விளக்கத்தால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


திருப்பதியில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவலே பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.