மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

 

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தில் தைப்பூசத்தெப்பத் திருவிழா நடைபெறும். இதனை சின்ன சித்திரைத் திருவிழா என்றும் போற்றப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு இவ்விழாவானது 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவினை முன்னிட்டு  மீனாட்சி சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன், காலை - மாலை என இருவேளைகளிலும் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பா். விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 5-ஆம் தேதியன்று விழாவின் 6-ஆம் நாள் நிகழ்வாக அருள்மிகு திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7 ஆம் தேதி விழாவின் 8-ஆம் திருநாள் மச்சகந்தியார் திருமணக்காட்சியும், 8-ஆம் தேதி விழாவின் 9- ஆம் நாள் நிகழ்வாக இரவு சப்தாவரணமும், 9ஆம் தேதியன்று விழாவின் 10-ஆம் திருநாள் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும்,  10ஆம் தேதியன்று  விழாவின் 11-ஆம் திருநாள் கதிரறுப்பு நிகழ்வும், 11 ஆம் தேதியன்று விழாவின் 12-ஆம் திருநாளாக தெப்ப உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்

 

தெப்பத் திருவிழா உற்சவம்


 

இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 11.02.2025 அதிகாலையில மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான, அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து, மேற்படி தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்திதீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும். மேலும் அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று, இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை அன்றைய தினம் திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். 

 

திருவிழா துவங்குகிறது


 

தெப்பத்திருவிழா நாளில் பக்தர்கள் நலன் கருதியும், வெளியூர்களிலிருந்து வருபவர்களின் நலன் கருதியும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும் உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 07.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் 30 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா தொடங்கிவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் பணி தொடங்கியது. முக்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க  தெப்பகுளத்தில் உள்ள தூணில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் விழா நடைபெற்றதை  தொடர்ந்து தெப்பத்திருவிழா நடைபெறும் போது அம்மனும், சுவாமியும் எழுந்தருளும் மிதவை தெப்பதேர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளது.