மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி பாலாலயம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில்

 






மதுரை என்றாலே  முதலில் நினைவுக்கு வருவது, மீனாட்சி அம்மன் கோயில் தான். மதுரை முழுவதும் பல இடங்களில் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனி தான். சிவபெருமான் தன் திருவிளையாடல் பலன்கள் நிகழ்த்தியது இந்த கோயிலை சுற்றி தான். ஓர் ஆண்டில் 274 நாட்கள் திருவிழாக்காகும் தலம் இதுதான். தமிழ் மாதங்கள் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதால் மதுரைக்கு திருவிழா நகரம் என்றும் பெயர் உண்டு. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட மீனாட்சியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. நவகிரகங்கள் புதன் தலம் இங்குதான். இங்கு வந்து அன்னையை வேண்டினால், திருமண வரன் கை கொடுக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி பாலாலயம் நடைபெறுகிறது.






 

தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் 

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோயில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை. இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக கோயிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

 


 



பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளனர்.



 

21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும். 12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளனர்.