மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா - விஜயதசமியை முன்னிட்டு  கல்வி - கலை மேம்பாட்டிற்காக வீணை இசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த 108 வீணை இசை வழிபாடு - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


 

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை பண்டிகைகள்

 

புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், தேவி வழிபாடும், பெண் தெய்வ போற்றுதலும் கொண்டு அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்க்கை அம்மன் தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.

 

ஒவ்வொரு பகுதியில் மாறுபடும் வழிபாடுகள்

 

தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜையானது முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். சரஸ்வதி தேவி, மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.

 

108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது

 


 உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைற்று முடிகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாள் விழாவான விஜயதசமியை முன்னிட்டு பள்ளி,  கல்லூரி மாணவ-மாணவியர்களின் கல்வி கலை மேம்பாட்டிற்காக கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வீணைஇசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

 

பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்

 

இந்த வீணை இசை வழிபாட்டில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான  மாணவிகள், பேராசிரியர்கள்   வீணை வழிபாட்டில் பங்கேற்று வீணையை இயற்றி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன, வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் , இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.