கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

வைகாசி பிரம்மோற்சவ திருவிழா 2024


 

மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், 47 -வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனைத்தொடர்ந்து  நாள்தோறும்  மாலையில் சிம்ம, அனுமான், கருட, சேஷ, யானை, தங்கச்சிவிகை, பூச்சப்பரம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் 9 -ம் நாளான பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி  இன்று  வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்வானது.

 


 

தேரினை வடம்பிடித்து இழுத்து சென்றனர்


கோயில் தேர்முட்டியில் இருந்து புறப்பட்டு தெற்கு வெளி வீதி வழியாக சென்று திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக வந்து தேர்முட்டியை அடையும். மேலும் இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அன்னதான நிகழ்வு


மேலும் இதுகுறித்து மதுரையை சேர்ந்த முத்து கிருஷ்ணன் கூறுகையில், “மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தொடர்ந்து அழகர்கோயில் சிறப்பாக இருக்கும். மதுரை நகர் பகுதியில் கூடலழகர் பெருமாள் கோயிலும் முக்கியமான ஒன்று. இந்தாண்டு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவில் குடும்பத்துடன் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுடன் தேர் திருவிழாவில் வடம் இழுத்தோம். இது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி என பல்வேறு கிராம பகுதி மக்களும் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டனர். இந்தாண்டு நேர்த்திக் கடன் செய்து வேண்டிக் கொண்டோம். நினைத்த விசயம் நிறைவேறினால், அடுத்த ஆண்டு அன்னதானம் நடத்தி திருவிழாவை மேலும் சிறப்பு செய்யலாம் என எங்கள் குடும்பத்தார் முடிவு செய்துளோம்” எனத் தெரிவித்தார்.