மலை போல சோறு, அண்டாவிற்குள் ஆறு போல கறிக்குழம்பு, ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்ட சுவரஸ்சிய திருவிழா மதுரையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இங்கு காவல் தெய்வம் கருப்பையா முத்தையா கோயில் சிறப்புடையது. இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம்.



இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்கும் வழக்கம் இல்லை, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே கூடி இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் கறிகளை சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர். கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆண்கள் இந்த திருவிழாவில் திரளாக கலந்து கொண்டு அசைவ உணவை ருசித்தனர். 



 

இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது அந்த ஆடுகளை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது.



பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 60 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள்.



அதன் பின்னரே கறிகளை எடுத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள் முதலில் கறியை வைத்து அதை பின் சாதம் அதன் பின்னரே கறி குழம்பு ஊற்றி அன்னதானம் நடைபெறும். இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். 



இந்த இலைகள் காய்ந்து, அங்கிருந்து மறைந்த பிறகே பெண்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவர். அடுத்த ஆண்டு அன்னதான விழாவிற்காக பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனாக ஆடுகளை வழங்கினர். நேர்த்தி கடனாக வழங்கப்படும் ஆடுகள் கருப்பு ஆடுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.