கரூர் அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு  கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கிருஷ்ணர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, அபிஷேக பொடி, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கிருஷ்ணர் சாமிக்கு பட்டாடை உடுத்தி, தங்க கவசம் சாத்தப்பட்டு, உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


 


 




 


இதனைத்தொடர்ந்து, வெண்ணை காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆலயம் அருகே உறியடி திருவிழாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.