கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பல்வேறு வண்ண வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.




கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்:


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு  ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றிய பிறகு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.



அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


ஆனி மாத தேய்பிறை:




ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் ஐந்து ரோடு கோடீஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இன்று காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் இருந்து நாளை மாலை மூன்று முப்பது மணி அளவில் வரை தேய்பிறை அஷ்டமி உள்ளதால் பல்வேறு ஆலயங்களில் இன்று இரவு கால பைரவர் பூஜை நடைபெற்றது.



மேலும் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலய வாசல் முன்பாக தங்களது நேர்த்திக்கடனான பூசணிக்காய் மற்றும் தேங்காய் தீபம் என்னை ஊற்றி விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். மேலும் தேய்பிறை அஷ்டமின் போது கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தை நிகழ்ச்சியை கண்டால் தங்களது கடன் சுமை குறையும் என ஐதீகம் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் தங்களது நேற்றி கடனை மனம் உருகி செய்தனர்.