கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத நாயன்மார்கள் திருவிழாவில் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 63 நாயன்மார்கள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக


 




உற்சவர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் உற்சவர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து திருமண கோலத்தில் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர்.


 




மேள தாளங்கள் முழங்க தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து யாக வேள்விக்கும் 63 நாயன்மார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாய்க்கும் மகா தீபாராதனை காட்டிய பிறகு ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் ஆடி மாத திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 




கல்யாண பசுபதீஸ்வரர் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி திருக்கல்யாண நிகழ்வு முடிந்த பிறகு சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானமும் நடைபெற்றது.


 




கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் 63 நாயன்மார்கள் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியை கண் குளிர கண்டு மகிழ்ந்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 




மேலும் 63 நாயன்மார்கள் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மாலை பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் 63 நாயன்மார்கள் திவிதி உலாவும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கரூர் மாநகர முக்கிய வீதி வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடையும் இந்த சுவாமியின் திருவீதி உலா நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.