விழுப்புரம் : திண்டிவனம் அருகே கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பெருமுக்கல் முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

பெருமுக்கல் முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் மகா தீபம்

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே பெருமுக்கலில் உள்ளது முக்தியாஜல ஈஸ்வரன் கோவில். இந்த கோவில் சஞ்சீவி மலை மீது அமைந்துள்ள மிகவும் பழமையான கோவிலான இங்கு, கார்த்திகை தீப திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், அந்த வகையில், தீபத்திருநாள் நேற்று,முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி ஈஸ்வரன் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வந்தன. தீபம் ஏற்றும் விழாவான நேற்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஈஸ்வரன், மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், அம்மாள், நந்தீஸ்வரர், அனுமன் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், தயிர், மோர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பழவகைகள் என 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது, இதனை தொடர்ந்து வெள்ளிக்கவசத்திலும், மலராலும் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்வரன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது நடந்த மகாதீபாராதனையை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

ஈஸ்வரனுக்கு நெய்யால் அபிஷேகம்

முன்னதாக திண்டிவனம் பெருமாள் கோவிலில் இருந்து 5½ ஆடி நீளமுள்ள பெரிய கொப்பரை லாரியில் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் பக்தர்கள் தங்களால் முடிந்த நெய்யை காணிக்கையாக வழங்கினர். பின்னர் பெருமுக்கல் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன் உடனுறை ஈஸ்வரனுக்கு நெய்யால் அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து பெரிய கொப்பரை 1500 அடி உயரமுள்ள மலைக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது, பின்னர் மாலை 5.55 மணியளவில் ஈஸ்வரனிடம் இருந்து பெறப்பட்ட தீ பந்தத்தை கோவிலில் இருந்து நெய்தீப கொப்பரை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தீ பந்தத்துடன் நெய் தீப கொப்பரையை 3 முறை சுற்றி வந்தபோது, தீபத்தை காணவந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷங்களை எழுப்பினர். வண்ணமயமான வான வேடிக்கைகளுடன் மாலை 6 மணிக்கு நெய் கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை  மரக்காணம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ரவிச்சந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

`சஞ்சீவி மலை' வரலாறு :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்காமகோட்ட நாச்சியாா் கோயில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது. எனினும் முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமையானவை உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுகளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக்  திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச்சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம் ஆகும்.