திருக்கார்த்திகை பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தீபம் ஏற்ற சிறந்த நேரம் எது என்பதை நாம் காணலாம். 


சிறப்பு வாய்ந்த கார்த்திகை 


தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கார்த்திகை. இதனை தீபங்களின் மாதம் என்று அழைக்கிறார்கள். இறைவனை பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடக்கூடிய மாதமாக இம்மாதம் அமைகிறது. அதேபோல் கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டின் வாசலில் விளக்கேற்றி வழிபடுவது ‘இறைவன் ஒளி வடிவாகவும் திகழ்பவர்’ என்பதை உணர்த்துகிறது. புராணங்களில்  யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் வந்த போது அவர்கள் முன் சிவபெருமான் அக்னி வடிவில் தோன்றினார். 


அடியையும் முடியையும் தேடிக் கண்டுப்பிடிப்பவரே பெரியவர் என்று அசசரீ குரல் ஒலித்த நிலையில் அதனை காணமுடியாமல் சிவபெருமானை முழு முதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். மேலும் தாங்கள் கண்ட காட்சியை அனைத்து மக்களும் காண வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றியதே கார்த்திகை தீப திருநாளாகும். 






அதேபோல் முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் இந்நாள் கொண்டாடப்படுவதால் முருகன் கோவில்களிலும் விமரிசையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


தீபமேற்ற சிறந்த நேரம் 


உலக பிரசித்தி  பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிக முக்கியமானது.  இங்கு தீபமேற்றி வழிபட்ட பிறகு தான் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்பது ஐதீகம். 


திருவண்ணாமலையை பொறுத்தவரை மாலை 5.30 மணிக்கு பஞ்சமூர்த்திகளின் தரிசனம், அதன் பின்னர் விநாயகர், முருகன், அண்ணாமலை, உண்ணாமலையம்மன் ஆகியோரை தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி காட்சி தருவார். இதன் பின்னர் கொடி அசைக்கப்பட்டு அடுத்த நொடியே சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 


அதனைக் கண்ட பின் நம் வீட்டில் மாலை 6.05 மணி முதல் 6.30 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். குறைந்தப்பட்சம் 27 முதல் அதிகப்பட்சம் 100 விளக்குகள் வரை ஏற்றலாம். அதேபோல் 3 நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 5) பரணி தீபம், இன்று திருக்கார்த்திகை தீபம், நாளை (டிசம்பர் 7) பெருமாளுக்காக ஏற்றப்படும் பஞ்சராத்திர தீபம் என விளக்கேற்ற வேண்டும். 


மிக முக்கியமான ஒன்றாக விளக்கேற்றுவது என்பது வாசலில் இருந்தே வீட்டுக்குள் தொடர வேண்டும். அதன்பின் பூஜையறை, படுக்கையறை,வரவேற்பரை, சமையலறை என வீட்டில் பிற இடங்களில் விளக்கேற்ற வேண்டும்.